Thursday, December 13, 2012

பெயர் ஏற்காமல் போனவன்


மரணம்,
ஆழ்கடல் முத்தொன்றில்
மறைந்துவாழும்
வஸ்த்து.

இடவலமாகச் சீட்டுக்கட்டில்
இடம்மாறி உட்கார்ந்ததும்
ரம்மி சேர்ந்து
ஆட்டத்தை முடித்துவிடும்
உயிர்.

அடுத்த ஆட்டத்திற்கு
அடுத்த ஆள்

யார்க்கும்
மறுவாய்ப்புக் கிடையாது.

சுற்றி அழுவோரின்
கதறலுக்கிடையில்
இசையொன்றுப் பிரவாகிக்கும்.

பெருந்தாய்
ஆத்திரார்த்திரமாக மாரடித்துக்கொள்ளும்
தாலாட்டு

நானும்
பெருங்கிளையொன்றிலிருந்து
மொட்டவிழாச் சிறுதளிராய்த்
தரைக்குத் தாழ்வேன்.

ஏந்தியக் கரங்களுள்
வெப்பம்

என் மனசெல்லாம்
கன்னிப்போன காயங்கள்.

பகிர்ந்துகொள்ள
உன்னையன்றி
இனி
தாயையும்
அணுகமுடியாத நடுக்கம்

அம்மா!

வாழ்ந்திருந்தால்

ஏதோவொரு கவிதையில்
நல்லவொரு சொல்லாக

வரையப்பட்டிருந்தால்
மனதை வருடும்
வண்ணக் கீற்றாக

வாய்ப்பறுந்து கிடக்கிறேன்

நான் அண்டச் சராசரத்தை ஆளும் வஸ்தாகிறேன்
வங்கக்கடலுக்கிடப்பட்ட மையாக

விஷநீலம் மையிருளில்
நிறப்பிறழ்வின்
குழப்பத்திலேயே

உங்கள் எல்லோருக்கும்
உலகப்பெயரேற்காதப்
பொய்யாகி
அர்த்தமற்றக் கனவாய்க் கலைகிறேன்

நான்

சின்ரெல்லாவின்
சிசு.
12.12.12
(இந்த நாளைப்போல் திரும்பவராதக் காலமாகிறேன்.)

Friday, December 7, 2012

கறந்தபால் மடிபுகா


ஞாபகத்திலிருந்த மழைத்தூரலில் நனைந்து
ஓவென அரற்றிப் பிறட்டியப் பெருமழையில் கரைந்தோடியது
ஒரு குடிசை.

கதவும் சிறுகுச்சிச் சன்னலும்
பக்கவாட்டில்
பத்தடியாகத் தள்ளி
மண்ணில் புதைந்திருந்தது
பாதியாக.

காலம் ஒன்றும்
சும்மா இல்லை.

சில்லென்றக் காற்றில்
உயிர் கொண்டு வந்தவொருக் குருவி
கனவைத்திறந்து பூமிக்கு உதிர்த்தது
இப்போ முளைத்திருக்கிறது.

பசுமையாய்
புதுவாடைகொண்டு.

பெரியவர்கள்
சிறியவர்கள்
நடுத்தர வயதினர்
தள்ளாத பெரியோர்

கும்பலில்
யார் பேசுவது?

எல்லோரும் பேசுகிறார்கள்.
            “போன மழையிலொருக்
            குடிசை அடித்துச் சென்றது.
பள்ளிச் சிறுவர்கள் வேடிக்கைப் பார்த்தனர்
பல்லில்லாத கிழவரொருவரும்
சலேஸ்வரக் கண்ணால் கண்டார்

தளிர்
மெல்லத் தலைதூக்கியது.

படபடக்கும் நெஞ்சில் கைவைத்து
பதிவான ஒரு பாடலைப் பாடியது

‘கறந்தபால் மடிபுகாது
என் மக்கா...!’

 ***

சின்ரெல்லா மெல்லியப் புன்னகையோடு
பிள்ளையைத் தடவிக் கொடுக்கிறாள்.

பிரஷர் குறைந்துவிட்டது.
உலகில் தனக்கென ஒரு கிளை.
ஆரவாரத்திற்கிடையில்
ஜென்மாந்திரமாகக் தொடரும் ஒரு உறவு
அந்துவிழும் இலைகளால்
அயர்ந்து ஓயப்போவதில்லை இனி.
ஆகாயத்திற்குச் சொந்தக்காரியாகிறாள்
சின்ரெல்லா.

அரியநாச்சி
7.12.2012