Thursday, December 13, 2012

பெயர் ஏற்காமல் போனவன்


மரணம்,
ஆழ்கடல் முத்தொன்றில்
மறைந்துவாழும்
வஸ்த்து.

இடவலமாகச் சீட்டுக்கட்டில்
இடம்மாறி உட்கார்ந்ததும்
ரம்மி சேர்ந்து
ஆட்டத்தை முடித்துவிடும்
உயிர்.

அடுத்த ஆட்டத்திற்கு
அடுத்த ஆள்

யார்க்கும்
மறுவாய்ப்புக் கிடையாது.

சுற்றி அழுவோரின்
கதறலுக்கிடையில்
இசையொன்றுப் பிரவாகிக்கும்.

பெருந்தாய்
ஆத்திரார்த்திரமாக மாரடித்துக்கொள்ளும்
தாலாட்டு

நானும்
பெருங்கிளையொன்றிலிருந்து
மொட்டவிழாச் சிறுதளிராய்த்
தரைக்குத் தாழ்வேன்.

ஏந்தியக் கரங்களுள்
வெப்பம்

என் மனசெல்லாம்
கன்னிப்போன காயங்கள்.

பகிர்ந்துகொள்ள
உன்னையன்றி
இனி
தாயையும்
அணுகமுடியாத நடுக்கம்

அம்மா!

வாழ்ந்திருந்தால்

ஏதோவொரு கவிதையில்
நல்லவொரு சொல்லாக

வரையப்பட்டிருந்தால்
மனதை வருடும்
வண்ணக் கீற்றாக

வாய்ப்பறுந்து கிடக்கிறேன்

நான் அண்டச் சராசரத்தை ஆளும் வஸ்தாகிறேன்
வங்கக்கடலுக்கிடப்பட்ட மையாக

விஷநீலம் மையிருளில்
நிறப்பிறழ்வின்
குழப்பத்திலேயே

உங்கள் எல்லோருக்கும்
உலகப்பெயரேற்காதப்
பொய்யாகி
அர்த்தமற்றக் கனவாய்க் கலைகிறேன்

நான்

சின்ரெல்லாவின்
சிசு.
12.12.12
(இந்த நாளைப்போல் திரும்பவராதக் காலமாகிறேன்.)

Friday, December 7, 2012

கறந்தபால் மடிபுகா


ஞாபகத்திலிருந்த மழைத்தூரலில் நனைந்து
ஓவென அரற்றிப் பிறட்டியப் பெருமழையில் கரைந்தோடியது
ஒரு குடிசை.

கதவும் சிறுகுச்சிச் சன்னலும்
பக்கவாட்டில்
பத்தடியாகத் தள்ளி
மண்ணில் புதைந்திருந்தது
பாதியாக.

காலம் ஒன்றும்
சும்மா இல்லை.

சில்லென்றக் காற்றில்
உயிர் கொண்டு வந்தவொருக் குருவி
கனவைத்திறந்து பூமிக்கு உதிர்த்தது
இப்போ முளைத்திருக்கிறது.

பசுமையாய்
புதுவாடைகொண்டு.

பெரியவர்கள்
சிறியவர்கள்
நடுத்தர வயதினர்
தள்ளாத பெரியோர்

கும்பலில்
யார் பேசுவது?

எல்லோரும் பேசுகிறார்கள்.
            “போன மழையிலொருக்
            குடிசை அடித்துச் சென்றது.
பள்ளிச் சிறுவர்கள் வேடிக்கைப் பார்த்தனர்
பல்லில்லாத கிழவரொருவரும்
சலேஸ்வரக் கண்ணால் கண்டார்

தளிர்
மெல்லத் தலைதூக்கியது.

படபடக்கும் நெஞ்சில் கைவைத்து
பதிவான ஒரு பாடலைப் பாடியது

‘கறந்தபால் மடிபுகாது
என் மக்கா...!’

 ***

சின்ரெல்லா மெல்லியப் புன்னகையோடு
பிள்ளையைத் தடவிக் கொடுக்கிறாள்.

பிரஷர் குறைந்துவிட்டது.
உலகில் தனக்கென ஒரு கிளை.
ஆரவாரத்திற்கிடையில்
ஜென்மாந்திரமாகக் தொடரும் ஒரு உறவு
அந்துவிழும் இலைகளால்
அயர்ந்து ஓயப்போவதில்லை இனி.
ஆகாயத்திற்குச் சொந்தக்காரியாகிறாள்
சின்ரெல்லா.

அரியநாச்சி
7.12.2012

Friday, November 16, 2012

சின்ரெல்லாவுகுச் சீமந்தம்

நெல் விளைந்த நிலம்
நீராகப் பரவியக் கடல்
உயிர்
திரட்சிக்கொள்ளும் வெளி

அப்போ,
யாருமற்ற வானில்
வட்டமாக, வெள்ளையாகச் சின்ரெல்லா.
கதிர், சூல்கொண்ட புதிர்.

ஒருமுறைத் திறந்துவிட்டால்
மூச்சில் தஞ்சம், உயிர்

அதிரும் உடலில்
படபடக்கும் நெஞ்சம்.
சுகரும் பிரஷரும்.

கருகொள்ளவும் மருத்துவமனை
பேறுவுக்கும் அங்கேயே
வீடென்பது வீடாகவா!?
கருவிற்கொரு இடமாகவா?!
உறவிற்கொரு இதமாகவா!?
சின்ரெல்லாவுக்கு மருத்துவமனை.

(சின்ரெல்லாவிற்கு, மஞ்சள் காமாளை, தைராய்டு, பிரஷர் என என்னென்னவோ சொல்கிறார்கள்.)

அழகில் மயங்கிய மாப்பிள்ளை
புதிதில் தடுமாறினாள், சின்ரெல்லா

இருவரும்
ஆண் பெண்,
பெண் ஆண்
அவ்வளவுதான்!

இடையில் புகுந்த நரிகளின் ஊளை
தூங்குமூஞ்சிகளின்
கண்களில் ஊளை.

எல்லாம் மறைக்கப்பட்டது
எதுவும் தென்படவில்லை.

சீமந்த நெறுக்கடியில்
பெண் வீட்டார்
மாப்பிள்ளை வீட்டார்
அங்கே
இங்கே
எங்கும் பிள்ளைகள்

வளர்ந்தப் பெருசுகளின்
வளராதப் பெருந்தன்மை

பணம் துரத்தும் பெருசுகளாய்
வாய்திறந்தலையும் ஓநாய்களாய்
எச்சில் தெரிக்கப் பேசிவிட்டு
நலுங்குக்கூட்டத்தில்
ஒரு ஊளைச் சப்தம்

கருவிலுள்ளது உருகொள்ளப் பயப்படுகிறது

பாவம்
சின்ரெல்லா
படபடப்பில்.

தொட்டதெல்லாம் பாழ்...,
கண்டதெல்லாம் பாழ்....,
சொன்னதெல்லாமும் பாழ்....,

சீமந்தம்!
சொந்தபந்தம்!!!

கன்னத்தில் சந்தனம்

கண்ணீர் வற்றியக் கண்களில் மிரட்சி

அரற்றுவோறும்
மிரட்டுவோறும்.

சின்ரெல்லா
மருத்துவமனைக்கே விரைகிறாள்
பிரஷர் 200ஐத் தாண்ட...

“நானாவது
மனிதனாகப் பிறக்கவேண்டும்”
சிசுவின் லப் டப்.
இப்போதைக்கு அதுதான் அதன் சபதம்.

அம்மாவின் 200ஐ குறைக்க.


அரியநாச்சி
16.11.2012

Wednesday, June 20, 2012


ஒரு மரக்கிளையில் இரண்டு குருவிகள்….

இருகுருவிகளின் இறகுதிரும் இசை ஒரு ரயில் தடதடக்கும் இசையாய், மெல்லக் கனவாகவும், மௌனம் உடைபடுகிற பேரொலியாகவும் நாகர்கோவில் குளிர்காற்றில் பஸ் ஏறி புதுச்சேரிக்குள் அலைந்து திரிந்த காலத்தில் பக்கங்கள் இலக்கியமாகிடும் வாழ்க்கை நெடுக கலை வாசற்கதவைத் தட்டிக்கொண்டே இருந்த ஒலியோடு இயைந்துவிட்ட இரண்டு குருவிகளும் கோட்பாட்டுக்கனவில் கைகோர்த்தக் காதல் எதிரெதிர் இருக்கையில் இப்போ… ஆனால் ரயில் போகும் திக்கு என்னவோ இரண்டுக்கும் ஒன்றுதான். மௌனம் ரயில் முழுக்க எதிரொலித்தது, அதிர்ந்தது. மௌனத்தின் எதிரொலி ஆழ்மனக் கிணற்றில் இருந்த அத்தனைப் பதிவுகளையும் தெளிவாகக் கண்முன்கொண்டுவந்து நிறுத்தியது உலகமொழிகளில் இல்லாத புதிய ஒலியில் யார்க்கும் புரிந்திராக அர்த்த அதிர்வில் தனக்குத்தானே.
கோட்பாட்டு ரயில் இப்போ ஜங்சனில் நிற்கிறது. நீரும் கரியும் நிரப்பும் நேரத்திற்குள் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு இறங்கிவிடவேண்டும். இரண்டு குருவிகளும் ஆளாளாக்கு தம் சேமிப்புகளையெல்லாம் காகிதங்களில் விளையாடவிட்ட வார்த்தைகளின் சோர்வுக்கு இடைவெளிகொடுக்காமல் சதா யோசித்து யோசித்து ஒவ்வொரு ஞாபக மறதியையும் பொய்யாக்கிக் கொண்டு வந்து தரவிறக்கம் செய்துவிடுகின்றன இரண்டும். ஒன்றுக்கொன்று சலைக்காமல்.
‘உனது இந்தப் பதிவால் ஒருபோதும் எதுவும் செய்துவிட முடியாது. ’ பெண் குருவி, எழுதிரிக்க முடியாமல்.
ஈனத்தில் மனங்குன்றிய வேகமே வெற்றியென இருந்தவரின் முகவாட்டம், வாழ்க்கையின் அத்தனை அனுபவத்தையும் சருகாய் ஊதிவிளையாடுகிறது அவர் ஈன்ற சந்ததிமொத்தமும், அவரைச் சுற்றி. அருகில் சென்று பொறுமையாக விளக்க முயற்சிக்கிறார். பட்டாம்பூச்சிகள் பறந்துவிடுகின்றன. ‘காத்திருப்பு’ அவற்றிற்கு இன்னும் அறிமுகமாகாத பழக்கம். மரமேற அவர் நினைத்தவர் மரங்களை வழிநெடுக நட்டதுதென்னவோ அப்போ! எப்போவேண்டுமானாலும் ஏறிக்கொள்ளலாம் என்றது உரத்தக் கேட்கிறது இப்போ! சரசரவென்று அவர் எண்ணம் கிளைகள் பல தாவி சந்ததியின் நெஞ்சுக்கூட்டைப் பிளந்து பார்க்கிறது. அங்கே பொங்கிய அரிசியும், பொங்கா பழங்களும் குழைந்து ஏப்பம் உற்பத்தியாகும் சப்தத்தில் குழம்பிப்போய் திறந்த இதயத்தை மூடாமல் திறந்தகண்களோடு கிளைகளூடாக விடைகளைத் தேடுகிறார்கள், உணர்வறியும் அனைத்து புலன்களையும் தொடர்புகொள்ளாமல். பட்டாம்பூச்சிகள் வெயில் ஏறியதும் பறந்துபோய்விடுகிறது. மாயமரம் காற்றில் கலந்துவிடுகிறது. கிளையில் கனவு கண்டிருந்த மனமும் உடலில் ஒடுங்கிவிடுகிறது.
கடைசி பெட்டியிலிருந்து அடுத்தப் பெட்டியிலிருப்பவருக்கு ரகசியசெய்தி அனுபவதாக எழுதிய காகிதங்களை அனுப்பிக்கொண்டே இருந்தால் எங்கு போகும்? காற்று பலமாக அடிக்கிறது. சாற்றிய கதவின் வழியாக அவரால் எகிறிக்குதித்தும் போகமுடியாது, சாவியை ச்செக்கர் எப்போதோ எடுத்துப்போய்விட்டார். எழுதிக்கொண்டே இருக்கிறாரே. அது யார்க்காக? தனக்காகவா. தானே அதை எற்கிறோமா என்று கவனிக்கவேண்டாமா?
இப்போ அந்த மாபெரும் மனம் கனத்தை  இறக்கிவைக்க ஆசைப்படும் போது அவற்றையெல்லாம் ஏற்றுக்கொள்ளவேண்டியது யாருமில்லை. திரு.மீராவின் நிழலில் உலகைச் சுற்றிவந்த உள்ளங்கள் அனைத்தும் தான். வயோதிகத்தால் மட்டும் பிடிவாதம் அதிகமாவதில்லை. கருத்துக்களில் வைத்திருக்கும் நம்பிக்கை பொய்யாகவேண்டிச் சுற்றி நின்று கேலிசெய்து சீர்கெடுக்கும் முகங்களின் வக்கிர வார்த்தைகளால் தான் எதிர்நிற்கத் துணிகிறேன். அதே பழைய கட்சிக்காரனாக. அந்தக் கட்சியும் இப்போ புதுரத்தம் பாய்ந்து, சோசலிசம் பேசுகிறது பாசிச முகமூடியை யார் கண்ணுக்கும் தெரியாதவகையில் கண்டுபிடித்து மாட்டிக்கொண்டு. கொஞ்சம் காங்கிரஸ் நெடியோடும்.
பிரபலங்கள் என்பது ஒருவரைச் சுற்றியிருக்கும் மனிதர்களின் எண்ணிக்கையில் அல்ல, வெளியே சொல்லாமல் உள்ளேயை வைத்திருக்கும் ஒருத்தரின் உன்னதமான உறவுதான் பிரபலம். கூட்டங்கூட்டமாக வந்துபோன இலக்கிய வாதிகள் வயிராறிய இ(ம)டம் திரு.மீராவின் மனம். அந்த பறவைகளுக்கு வேறெங்கும் தங்குவதற்கான லகு இருந்ததில்லை. அது அந்த ஸ்டீல்லைட்ப் பிதாவிடம் தான் இருந்திருக்கிறது. கட்சியும், கலையும் தன் வியர்வையால் வளர்த்த இடைநில்லாப் போராளி. வயோதிகத்தின் விளிம்பில் நின்றுகொண்டு கடந்துவந்தப் பாதையைப் பார்க்கும் கண்களுக்குள் புறையோறி இருப்பதால் பதிவாகியிருக்கும் காட்சிகளில் கலர் மங்கியிருக்கலாம், கருத்துத் தொலைந்திருக்கலாம் அல்லது நினைவு பிறழ்ந்திருக்கலாம், ஆனால் அவரின் மனம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு ஞாபகங்களும் ஒரு உணர்வைச் சொல்ல முயன்றிருக்கிறது. அதில் புன்படும் விசயங்கள் நிறைய விரவியிருந்தாலும், இவர் இப்போ அன்போடு அரவணைக்கத்தக்கக் குழதையாகிறார், அவர்க்கு அந்திப்பெற்றோர்களாக ஒப்பனை செய்துகொள்பவர்களாக மாற, உறவுகள்.
அன்பிற்கினிய திரு.மீராவின் மௌனம் உடைபடும் வேளையில் அவர் கனவின் ஒரு பகுதி நிறைவேறுவதால் யார்க்கு இடறாக இருந்தாலும் என் குழந்தையின் சின்னஞ்சிறிய தவற்றை பெருமிதமாகப் பேசுவதால் தான் நான் ‘அப்பா’. இதையே திருப்பிப்போட்டு அர்த்தம் எடுத்தால், ‘மகன்/மகள்’ எனவும் பொருள்கொள்ளும்.
வாழ்க்கையை இலக்கியமாக்குபவர்களும் இருக்கிறார்கள். இலக்கியமாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். தராசின் முள் இப்போ நடுவில் இருக்கிறது. யாரும் அசைத்துவிடாதீர்கள். கணக்கு தப்பாகிவிடும்.
அரியநாச்சி
20.06.2012

குறிப்பு: இது ஒரு அலாதியான அனுபவமும், கற்பனையும், சமூக அக்கரையுமுள்ள ஒரு தம்பதியருக்குள் நிகழ்வதாக வெளிபட்டக் கற்பனை. அந்த ரயில் இப்போ எந்த ஸ்டேஷனிலும் நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதால்  அவர்கள் இருவரையும் யாரும் சந்திக்க முடியாது. அவர்களின் குரல்கள் தங்கிவிட்ட நிறுத்தங்களிலிருந்து வார்த்தைகளைப் பொறுக்கி யெடுத்துக் கோர்த்து வைத்திருக்கும் இந்தப் பகுதியில் சொந்தக் கற்பனை மட்டுமே இருப்பதால், கற்பனை என்று மட்டுமே ஏற்றுக்கொள்ளவும்.

Wednesday, January 4, 2012

ஒரு சிறுகதை நாடகமாடுகிறது


(ஆனந்தவிகடன், 4.1.2012 வெல்கம் 2012 ஸ்பெஷல் இதழில் வெளிவந்த திரு.தாமிரா அவர்கள் எழுதிய “நாடகம்”என்ற சிறுகதை பற்றி)

கட்டற்ற உலக உணர்வுகளை நடிகர்களின் குரல் அதிர்விற்கு மாற்றி அரங்கப்பொருட்களோடு இயைந்த ஒரு நிகழ்வில் கதையின் பெரும்பரப்பை இரத்தமும் சதையுமாகக்கோர்த்து, பார்வையாளர்களுக்கு விருந்து படைக்கும் நாடகக்கலைஞர்களின் வாழ்க்கை, முடிவிலாப் போர்க்கள அனுபவம். வயதானாலும் கனத்தப் போர்வாளை நடுங்கியபடியே தூக்கிப்பிடித்து எதிரியை வீழ்த்த முயற்சித்துக்கொண்டே இருப்பவர்கள்.

நாடகம் போடும் இடமும், அதைப் பார்க்கக்கூடும் பார்வையாளர்களின் நிலையும், தரமும், எண்ணிக்கையும் என பல்வேறு காரணிகளால் அந்த கலைஞனுக்குக் கிடைப்பது என்ன என்றக் கேள்வியை உங்களது மேசைமீது வைத்துவிடுகிறேன்.

அதையெல்லாம் தாண்டி, இந்தக் காலத்திலும் ஒரு கலைஞன் வாழ்கிறான் எனும்போது கான்கிரீட் நெறுக்கத்திற்குள் அதிசயப் பூவாக அவனைக் கருதவேண்டும். இந்த உணர்வை வெறும் கற்பனையாகவே நமது கதைகளிலும் ஏக்கங்களிலும் காண்கிறோம், நிஜமாக நம்முன் நம்மோடு இருக்கும்போது மயக்கதில் கடந்துபோய்விடக்கூடாது என்பதற்காவே இது.

தெருத்தெருவாக பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக நாடகத்தைப் போட்டு குழந்தைகளை மகிழ்வித்து துணிக்குல்லாவில் விழுந்த சில்லரைகளில் இருந்து தனக்கும் தன் நாடகக்கூட்டாளிகளுக்கும் வயிர் நிறைத்து, அரங்கப்பொருட்கள், பேப்பர், புத்தகம், பேனா, சதா உறவுக்கும் எழுத்தாள நண்பர்களுக்கும் எழுதும் கடிதங்களுக்கு என அனைத்தையும் பார்த்துக்கொண்டு வாழ்க்கையை கொண்டாட்டமாக வாழ்ந்த புதுவை பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரி, வேலுசரவணன். இப்போ ஒரு பல்கலைக்கழத்தில் நாடக ஆசிரியர். வைகவி, லவா எனும் இரண்டு அன்பான, குழந்தைகளின் தந்தை, வேலுசரவணனைக் கைகோர்த்த நாள் முதற்கொண்டு பயணமும், பயமும், ஏழ்மையும் மனதை வாட்டியபோதெல்லாம் வெளிக்காட்டாமல் வாழ்ந்து வேலுவையும் அவரது இரண்டு குழந்தைகளையும் மதிப்போடும் மறியாதையோடும் வளர்த்துவரும் அருமைச் சகோதரி முத்துலட்சுமி, என நம்மோடு வாழும் வேலுசரவணன் இதுவரையிலான பார்வையாளர்களின் கற்பனைக்களத்தில் மனதை வருடும் இனிய அனுபவமாக இருக்கிறார்.

அவரது நாடகங்களைப் பார்த்துக் களித்துவளர்ந்த குழந்தைகள் இப்போ பெரியவர்களாகி திரு.தாமிரா எழுதிய “நாடகம்“கதையை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். வேலுமாமாவின் குல்லாவில் படிந்துள்ள தூசுகளைத் தட்டியபடி.

நமது பைட் பைப்ப்பர் இந்த ஆயிரமாயிரக் குழந்தைகளுக்குக் கதைச் சொல்லி அவர்களின் மனதைப் புரிந்துகொள்ளாமல் பொருட்களால் நெறுக்கி முடக்கி, உறைய வைத்திருந்த பெரியவர்களிடமிருந்து தப்பிக்க வைத்துக் கடல்பூதக் கதைக்குள் “ஏஹேய்....“ சொல்லி படகோட்டும் குழந்தைகளாக்கி ஏழு கடல் தாண்டும் கற்பனையைப் பெறுபவர்களாகியிருக்கிறார்கள். அந்தக் குழுந்தைகளின் நம்பிக்கையைக் கொல்வதென்பது ஆபத்துதான்.

திரு.தாமிரா அவர்கள் தமது முகநூலில், ”இந்தக் கதையை வேலுசரவணனிடம் விவாதித்திருக்கிறேன். கதாநாயகனின் பெயரை தன் பெயராகவே இருக்கட்டும் என்றும் கதைக்காகப் போடும் படம் தன்னைப் போல இருக்கட்டும்” என்று வேலுசரவணன் கேட்டுக்கொண்டதாகவும் என்று எழுதுகிறார். அவருடைய பக்கத்திலிருந்து பார்க்கும் போது அவர் வேலுவின் ஒப்புதலின்றிப் போடவில்லை தான் என்று தெரிகிறது.

பிரபலமானவர்களின் உருவங்களை செருப்பிலும் பனியன்களிலும் படமாக போட்டு வியாபாரம் செய்த கம்பனிகளுக்கு எதிர்ப்பு வந்தது நினைவிற்கு வருகிறது.

பலரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பவரைப் பற்றியான அபிப்பிராயங்களை மாற்றியமைக்க முயற்சிக்கும் போது “சம்பந்தப்பட்டவரே ஒப்புக்கொண்டார் உனக்கென்ன“ என்று செல்வது சொல்பவரையும் சொல்லப்படுபவரையும் தாண்டி இருவரையும் வளர்க்கும் பார்வையாளர்களின் கண்களில் அமிலத்தைத் தெளிப்பது ரசிப்பதற்குச் சமம்.

இருந்தாலும் ஏன் இதுபோன்ற ஆரவாரத்திற்குள் மக்களை அள்ளிப் போட்டுக் குத்திப் புடைக்கிறார்களோ தெரியவில்லை. சமூகத்தின் மூச்சையடைக்கும் இதுபோன்றப் புழுதியில் எதை உறிஞ்சித் திண்ணப்போகிறார்கள். வேலுசரவணனைத் தெரிந்தவர்களும், திரு.தாமிரா அவர்களைத் தெரிந்தவர்களும், இருவரைத் தெரிந்தவர்களும், இருவரில் எவரையும் தெரிந்திராமல் வெறும் 22 ரூபாய் ஆனந்தவிகடனுக்குச் செலவழித்து இந்தக் கதையைப் படித்தவர்களும் என அத்தனைப் பேரையும் இவர்கள் ஏமாற்றுகிறார்கள்.

இந்த இருவரைப் போலத்தான் பலர் உலகின் அமைதியை கொந்திக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புது இசமாகவே உருவாகிறதோ என்னவோ?

பிதுக்கல்கள், குமட்டல், அறுவறுப்பு போன்ற மறைக்கப்படவேண்டிய துர்விஷயங்களை பட்டவர்த்தனமாக்குவது நாகரிகம் என்றால்....! அதனால் பொது ஒழுக்கும் அவசியம் தேவை. நீ குளிக்கிறாயோ இல்லையோ, அடுத்தவர் அருகில் வரவேண்டுமானால் குளித்துவிட்டுத்தான் வரவேண்டும். சாக்கடைக்குள் கைவிட்டு சந்தனத்தை எடுத்து என்ன பயன். இதுபோன்ற கரடுமுரடான அனுபவங்களை மக்கள் நிறையவே அனுபவித்துவிட்டார்கள். நாமும் பல ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து வருகிறோம். ஒருவர் மாற்றி ஒருவர் கதைசொல்லி கதைசொல்லி இப்போதைய நாகரிகத்தை அடைந்திருக்கிறோம். இடையே சில சிந்தனையாளர்கள் எல்லாவற்றையும் கலைத்துப்போட்டு சீட்டுக்கட்டாக மீண்டும் மீண்டும் மாற்றிமாற்றி அடுக்கினார்கள். இறுதியாக அமைதியும், சாந்தமும், இனிமையும் தான் இலக்காக நிற்கிறது. இனிமையான விசயங்களுக்காக உலகம் ஏங்கிக்கொண்டிருக்கிறது. அமைதியான காலத்தை அனுபவிக்கத் தவிக்கிறது. ஒவ்வொரு நொடியும் மனித மனம் அனுபவிக்கும் துன்பம் உக்கிரமாகிக் கொண்டே இருக்கிறது. நமது வாழ்க்கை இப்படியாக இருக்க, ஒரு நாடகக் கலைஞனின் ஒப்பற்ற வாழ்க்கையைத் திண்ணத் துடிக்கும் - எதையும் திண்ண லாயக்கற்ற மிருகங்களின் சகிக்கமுடியாதக் குதறல்களெல்லாம் கலை என்றால் இந்த உலகம் துப்பாக்கிக்குண்டில் அடங்கிடட்டும். யாரைவேண்டுமானாலும் சுட்டுவிட்டு தானும் தவிடுபொடியாகட்டும்.

அந்த குழந்தை நாடகக் கலைஞன் நல்லவனோ கெட்டவனோ, எங்கள் குழந்தைகள் அவனை மிகவும் நேசிக்கிறது. அவருடைய நாடகத்தைப் பார்த்து வளர்கின்றன. அவருடன் நடிக்கிறது. என் குழந்தையைப் போல் உங்கள் குழந்தைகளுக்கும் நல்ல அபிப்பிராயம் இருக்கும். அதனால் அவரை குடிகாரன் என்று சொல்லாதீர்கள். அவர் குடித்தாலும். பெண்களோடு சுற்றுபவன் என்று சொல்லாதீர்கள் அப்படித் தான் சுற்றுகிறார் என்றாலும். புதுவை மற்றும் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் நாடகம் போட்டிருக்கிறார். நீங்கள் படமாக எடுத்தால் அந்தக் குழந்தைகள் (இப்போதைய பெரியவர்கள்) தான் பார்க்கப்போகிறார்கள். அப்போ உங்களது ”நாடகம்” கதை என்ன விளைவை ஏற்படுத்தும்? அவர்களது நம்பிக்கையை கீறும். சின்னாபின்னமாக்கும். அவர்கள் இதுவரை காத்துவந்த அழகிய பிம்பங்களை உடைக்கும். இதுவொன்றும் கட்டுடைப்பு அல்ல. குழந்தைகள் உங்களிடம் வந்து “வேலுமாமா குடிகாரனா?” என்று கேட்கும். அதற்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருப்பீர்கள். அல்லது ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் குழந்தை பயத்துடனே சாப்பிட நேரிடலாம். சாப்பாட்டில் விஷம் இருக்குமோ என்ற பயத்தில். வண்டியில் வர பயப்படலாம், வழியில் தள்ளிவிட்டுவிடுவீரோ என... இது ஒரு முடிவிலா பட்டியல்.

நாடகங்களைப் பார்த்தக் குழந்தைகளில் எத்தனை பேர் இந்த ஆனந்தவிகடனை வாசித்திருப்பார்கள். இருபத்திரண்டு வருட நாடகப் பயணம். வேலுசரவணனே சொன்னாலும் கூட அவனது வாழ்க்கை அவனது வாழ்க்கையாக பதிவு செய்யப்படுமேயன்றி சினிமாவுக்காக ஆண்மையற்றவன், குடிகாரன் என்று இட்டுக்கட்டுவது நல்ல கதையாகவோ, படமாகவோ ஆகாது.

”நாடகம்” கதையில் ”வேலு”, ”குழந்தைகள் நாடகக்காரன்” என்ற இரண்டு சொற்களையும் எடுத்துவிட்டுப் படித்தால் கதையின் கணம் மாறிவிடும். அந்தக் கதையை உள்ளூர்காரனும் படிக்கட்டும், வெளியூர்காரனும் படிக்கட்டும். கருத்தைக் கேளுங்கள். சிறிது நேரத்திற்குப் பின் நீக்கியச் சொற்களை மீண்டும் அந்தந்த இடங்களில் சேர்த்துப் படித்தால் அதன் பொருளே வேறு. முன்புபோல் உள்ளூர் வெளியூர் விதியைப் பயன்படுத்தி கருத்தைக் கேட்டுப் பாருங்கள். நிறைய வித்தியாசம் இருக்கும். இந்த வித்தியாசமே, அடுக்களையில் வைக்கவேண்டியது எது, வரவேற்பரையில் வைக்கவேண்டியது எது, பூஜை அறையில் வைக்கவேண்டியது எது அல்லது கழிவறையில் வைக்கவேண்டியது எது என்பதைச் சொல்லும்.

வேலுசரவணனைத் தெரியாத ஊரில்கூட இந்தக் கதை செல்லுபடியாகாது.

பல கதை(லை)கள் அப்படித்தான் கூரை ஏறி கோழி பிடிக்காமுடியாமல் வானம் ஏறி இருக்கிறது. பாராட்டியவர்களின் “போல் பாராட்டுப் பத்திரங்கள்” நீண்டிருக்கிறது.

நாடகம் உலகம் வேறு சினிமா உலகம் வேறு. மேடையில் தினம் தினம் ஓடியாடித் தாவிக்குதித்து இருபது வருடங்கள் தொடர்ந்து மேடையைச் சுற்றிச்சுற்றி வருகின்ற நடிகன்.

வேலுசரவணனை நன்கு தெரிந்த ஆனந்தவிகடன் (வேலுசரவணனே ஒப்புக்கொண்டாலும்) நல்லவற்றை மட்டும் வெளியிடுவது என்னைப் போன்ற ஆனந்த விகடன் வாசிப்பவர்கள் மனதைப் புன்படுத்தாது என்று நம்புகிறேன்.

அரியநாச்சி